தென்னாபிரிக்காவில் பரவிவரும் திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் முன்னர் பரவியதை விட வேமாகப் பரவக் கூடியது மட்டுமன்றி, கோவிட்19 தடுப்பூசிகளின் செயல்திறனையும் பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின் புதிய திரிவு கொரோனா தடுப்பூசியின் திறனில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தும் என்றே கருதுகிறோம் என குவாசுலு-நடால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா கூறினார்.
SARS-CoV-2 இனத்தைச் சேர்ந்த 501Y.V2 எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திரிபு வைரஸ் குறித்துப் புரிந்து கொள்ள தென்னாப்பிரிக்காவில் இடம்பெறும் ஆய்வுகளை பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா வழிநடத்தி வருகிறார்.
எனினும் சந்தையில் தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளில் சில வகை புதிய வகை வைரஸில் இருந்தும் பாதுகாப்பளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா கூறினார்.
தனது குழு கடந்த 15 நாட்கள் இரவு-பகலாக புதிய திரிவு வைரஸ் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் இது குறித்து ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என நம்புவதாகவும் பேராசிரியர் டி ஒலிவேரா தெரிவித்தார்.
501Y.V2 புதிய திரிவு வைரஸ் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப்பில் உள்ள நெல்சன் மண்டேலா விரிகுடாவில் அடையாளம் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.
இதேவேளை, இன்றுவரை தென்னாப்பிரிக்காவின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளர் எண்ணிக்கை 11 இலட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும் சுமார் 100,000 புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.